சென்னை: தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவார்கள் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை திரும்ப ஒப்படைக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக- தேமுதிக இடையான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துவருகிறது. இதனிடையே கடந்த மாதம் 25-ம் தேதி முதல் தேமுதிக சார்பில் விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதி குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். விஜயகாந்த்தின் முத்த மகன் விஜயபிரபாகரனும் தொகுதி குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இவரும் எந்த தொகுதி எனக் குறிப்பிடாமல் விருப்பமனு தாக்கல் செய்து இருப்பதாக கூறப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை திரும்ப ஒப்படைக்க இன்றே கடைசி நாள் என்று தேமுதிக ஏற்கனவே தெரிவித்து இருந்தது.